சுரா எழுதிய ‘கவிமணி: நினைவோடை’ நூலை ஒரு சிறிய பொக்கிஷம் என்பேன். கவிமணியை மிகவும் அருகிலிருந்து பார்த்து பேசியது போன்ற உணர்வை எனக்கு அளித்தது. கவிமணியின் குறிப்பிடத்தக்க படைப்பென்று சுரா விரித்துரைத்த, “நாஞ்சில்நாட்டு மருமக்கள்வழி மான்மியம்” என்னும் அங்கதக் கவிதைநூலை விரைவில் வாங்கி வாசிக்க வேண்டும். கவிமணிக்கு வெளியுலகத் தொடர்புகள் அதிகம் இல்லை என்றாலும், அவர்தம் வாழ்க்கையின் பிற்பகுதியிலேயே அவருக்கான உரிய அங்கிகாரம் கிடைத்தது என்றாலும், அவரது காலக்கட்டத்தில் வாழ்ந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், டி.கே.சி, ராஜாஜி, கல்கி, எஸ். வையாபுரிப்பிள்ளை, கலைவாணர் போன்ற பல ஆளுமைகள் அவர் இருக்குமிடம் தேடிவந்து அவருடன் பேசிவிட்டு, தொடர்ந்து நல்லுறவை பேண விரும்பியிருக்கிறார்கள் என்று அறிந்த போது ஆச்சரியப்பட்டேன். பாடப் புத்தகங்களிலும், அவற்றுக்கும் வெளியே சில கவிதைகளையும் வாசித்தது போக கவிமணியைப் பற்றிய அறிவு துளியும் எனக்கு இருந்ததில்லை. சுராவின் இந்த நினைவோடை ஒரு கண்திறப்பாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி. பின் இணைப்பில் கவிமணியின் சில புகைப்படங்களையும், காலவரிசையையும் இணைத்து – கவர்ச்சியான அட்டை வடிவமைப்புடன் காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
Continue reading →